சசிகலாவின் சொத்துக்களை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது.. அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.!

சசிகலாவின் சொத்துக்களை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது.. அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.!

Update: 2021-02-11 13:09 GMT

நாகூர் பேருந்து நிலையம் அருகே யாத்ரீகர்கள் தங்குவதற்காக ரூ.1கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் யாரும் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி எந்த செயலையும் செய்ய மாட்டார்கள்.

அதே சமயம் சொத்துக்குவிப்பு வழக்கு முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு வரவேற்பு அளித்தது அதிமுக தொண்டர்கள் கிடையாது. கடந்த 4 ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல், மற்றும் சட்டமன்ற தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல்களை சந்தித்த அமமுகவினரின் பலம் என்ன என்பது அதில் இருந்தே நாட்டு மக்களுக்கு தெரியும்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்படுவது உச்சநீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டது. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதால் அதிகாரிகள் பணிகளை செய்கின்றனர். இதில் அரசியல் எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News