ஆதாரத்தை வெளியிட்டால் தமிழகத்தில் பல பெரும் தலைகள் உருளும் - அண்ணாமலை கூறிய பகீர் தகவல்!
அண்ணாமலை கேள்வி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உளவுத்துறை எச்சரித்தும் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் 4 நாட்களாக ஏன் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கோவை கமிஷனர் அக்டோபர் 18-ம் தேதி எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் வரவில்லை என்கிறார். ஆனால், மத்திய உள்துறை 18ம் தேதி மதியம், தமிழக அரசுக்கு தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
இடையில் என்ன நடந்தது?
தமிழக காவல்துறை 3 நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 21ம் தேதி மாலை மாநிலத்தின் உளவுத் துறை, மத்திய அரசு கொடுத்த அறிக்கையை எடுத்து, அதற்கு மேல் சில விஷயங்களை எழுதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் கடிதம் அனுப்பியது. 23ம் தேதி இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. காவல் துறை டிஜிபி, கோவை மாநகர காவல் ஆணையர் தங்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை வரவில்லை என்கின்றனர். ஆனால், 21ம் தேதி உளவுத் துறை எழுதி அனுப்பியுள்ள கடிதம் என்னிடம் இருக்கிறது என்றார் அண்ணாமலை.
பெரும் தலைகள் உருளும்
காவல்துறை எனக்கு சம்மன் அனுப்பினால் நான் ஆதாரத்தை கொடுக்கத் தயாராக இருக்கிறேன். கொடுத்த பிறகு முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை கூற வேண்டும். தமிழகத்தின் இறையாண்மை, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக காவல் துறையிடம் இருந்து எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையை வெளியிட்டால் தமிழகத்தில் பல பெரும் தலைகள் உருளும் எனக்கூறினார். இதுபோன்ற விவகாரங்களில் ஏற்படுகின்ற காலதாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்படக்கூடும் என்றார்.
Input From: Hindu