TNPSC குரூப் 1 பாடத்திட்டத்தில் குழப்பம்.. ஈ.வே.ரா சுதந்திர போராட்ட வீரரா? இந்துமுன்னணி கடும் கண்டனம்..

Update: 2024-06-27 11:08 GMT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1 தேர்வுப் பாடத்திட்டத்தில் சமீபத்தில் ஈ.வே.ராமசாமி (பெரியார்) பெயரும் சேர்க்கப்பட்டதற்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்து முன்னணி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கூறும் பொழுது, "T.N.P.S.C குரூப் 1 தேர்வு பாடத்திட்டத்தில் தேசிய மறுமலர்ச்சிக்கான பிரிவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பட்டியலில் ஈ.வே.ராமசாமி என்கிற பெரியார் பெயரும் இடம்பெற்றுள்ளது. அம்பேத்கர், பகத்சிங், வ.உ.சிதம்பரனார், பாரதியார், காமராஜர், சுபாஷ் சந்திர போஸ் போன்றோர் இடம் பெற்ற பட்டியலில் ஈ.வே.ராமசாமியும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

ஆகஸ்ட் 15 கருப்பு தினம் என்று பேசியவருமான, ஆங்கிலேயன் சென்று விட்டால் பாரத தேசத்தில் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்றும் கூறியவரான இவர் எப்போது சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டார். திராவிட கழகத்தின் மாநாட்டில் லண்டனில் இருந்தாவது நீங்கள் ஆட்சி செய்யுங்கள். அப்படியே சுதந்திரம் கொடுத்தாலும் கூட, சென்னையை நீங்களே ஆட்சி செய்யுங்கள் என்று தீர்மானமும் நிறைவேற்றியவர் ஈ.வே.ராமசாமி.


ஆரம்பத்திலிருந்தே தேசியத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த இவரை தேசிய எழுச்சிக்கு வித்திட்டவர் என்னும் பொருள்படும் படியாக பாடத்திட்டத்தில் வைத்திருப்பது தவறான வரலாறுகளை மாணவர்கள் படிக்க ஏதுவாக அமையும். மேலும் உடல், பொருள், ஆவியை அர்ப்பணம் செய்து நமது தேசத்திற்காக சுதந்திரம் வாங்க எத்தனையோ தியாகங்களை செய்த பெரியோர்களின் பட்டியலில் சுதந்திரத்தை அவமதித்த ஈ.வே.ரா.வின் பெயர் இடம் பெற்று இருப்பது கண்டனத்திற்குரியது. எனவே T.N.P.S.C பாடத்திட்டத்தில் இவர் குறித்த பகுதியை நீக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது" என்று இந்து முன்னணி வலியுறுத்தி இருக்கிறது.

Input & Image courtesy:The Commune News 

Tags:    

Similar News