மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுக: ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை கட்டாயமாக்கிறது. இதன்படி தமிழ்நாட்டிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-11-18 10:07 GMT

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டிருந்தன. சுமார் 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தன. பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை கட்டாயமாக்கிறது. இதன்படி தமிழ்நாட்டிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 


தற்போது தமிழ்நாட்டில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாகத் தெரிவித்த மாநில அரசு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லூரிகளைத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்திட வேண்டும் என்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, இந்த அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகலை படிப்படியாகத் திறந்து வருகிறது.


இச்சூழ்நிலையில் கல்லூரிகள் திறந்து சுமார் இரண்டரை மாதங்களே ஆனதாலும், முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பண்டிகைக் காலம், பருவ மழை என்று கல்லூரிகளுக்கும் அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதாலும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே, செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த செமஸ்டருக்கான சிலபஸ் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற பாடத்திட்டம் (சிலபஸ்) கல்லூரி பேராசிரியர்களுக்குக் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும், எனவே இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை முழுமையாக எங்களுக்கு ஆசிரியர்கள் நடத்தவில்லை என்றும், மேலும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்ததாக இன்றைய நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. கல்லூரிகளில் நடைபெற உள்ள வகுப்புகளுக்கு மாணவர்கள் நேரடியாக வரக்கூடிய சூழ்நிலை இருந்தாலும், பல மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாத காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. 


கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடி தேர்விற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டி, இந்த முறையும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை அரசுக்கு வைத்து, வகுப்பை புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். எனவே அனைத்து கல்லூரி மாணவ, மாணவியரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்றும், அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கும் வந்து பாடம் கற்கிறார்களா? என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நேரடி தேர்வு நடத்தினால் தான் மாணவச் செல்வங்கள் முழு திறமையோடு தேர்வை எதிர்கொள்ள முடியும்.

இந்த அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, போதிய நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், இந்த செமஸ்டருக்குண்டான பாடத்திட்டம் (சிலபஸ்) இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும், இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிக்க முடியவில்லை என்பதையும், மாதிரித் தேர்வுகள் நடைபெறாததையும், அனைத்து மாணவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கல்லூரிக்கு வருகிறார்களா என்பதை உறுதி செய்ய இயலாத நிலையையும் கருத்திற்கொண்டு, நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Admk Twiter

Tags:    

Similar News