"காஷ்மீர் ஸ்ரீநகர் மாவட்டத்தில் ட்ரோன்கள் வைத்திருப்பதற்கும், விற்பதற்கும் தடை" - ஆட்சியர்!

Update: 2021-07-05 12:08 GMT

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் ஜம்முவில் உள்ள விமான தளத்தில் இரண்டு ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த கட்டடத்தின் மேல்தளத்தில் பாதிப்பு ஏற்பட்டது, மேலும் அங்கு இருந்த இரண்டு பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர். இதன் விளைவாக ரஜவுரி மாவட்டத்தில் ட்ரோன்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் தற்போது, ஸ்ரீநகர் மாவட்டத்திலும் ட்ரோன் வைத்திருப்பதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஸ்ரீநகர் மாவட்ட ஆட்சியர், முகமது அஜாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " ஸ்ரீநகர் மாவட்டத்தில் ட்ரோன்கள் வைத்திருப்பதற்கும், பறக்க விடுவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ட்ரோன் வைத்திருப்போர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்து, ரசீது பெற வேண்டும். மேலும் அரசாங்க துறைகள் ட்ரோன்கள் மூலம் விவரணையாக்கம், ஆய்வுகள்,  இயற்கை மற்றும் விவசாய பாதுகாப்பு கண்கணிப்புகள் ஆகியவை மேற்கொள்ளும் முன்பு காவல் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.


கடந்த சில ஆண்டுகளாக ட்ரோன் வாயிலாக படம் பிடிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பதிவு செய்வது ஆகியவை அதிகரித்துள்ளன. தற்போது உள்ள நிலையில் முக்கிய பகுதிகள், அதிக மக்கள் தொகை உள்ள இடங்கள் ஆகியவற்றில் ட்ரோன்களை  பறக்கவிடும்போது குழப்பம் ஏற்படும், இதனால் பயங்கரவாதிகளின் ட்ரோன்களை தடுப்பது சிரமமாக இருக்கும். இதன் காரணமாக ஸ்ரீநகர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க விடுவது தடை செய்யப்படுகிறது, மேலும் இதை மீறுவோர் மீது சட்டத்தின் படி, காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

Tags:    

Similar News