"எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை பின்பற்ற கூடாது" - முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்!
ஈஷாவின் 3 நாள் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை!
ஈஷா லீடர்ஷீப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'Human Is Not a Resource' என்ற பெயரிலான 3 நாள் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (ஆக. 3) தொடங்கியது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இன்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திரு. வெங்கடேஷ் பிரசாத் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், "ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வெற்றி பெற வேண்டுமானால், அதற்கென்று நன்கு கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் இருக்க வேண்டும். இதற்கு மேற்கு இந்திய கிரிக்கெட் அணியையும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையும் உதாரணமாக சொல்லலாம். ஆஸ்திரிலேயாவில் கிரிக்கெட்டிற்கென்று அகாடமி உள்ளது. அவர்கள் வீரர்களின் திறமைகளை நன்கு ஊக்குவிக்கிறார்கள். இன்றும் கூட அந்நாட்டில் ஒருவருக்கு 38 வயது ஆகியிருந்தாலும் அவரிடம் திறமை இருந்தால், அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட முடியும். அவர்கள் வயதை ஒரு தடையாக பார்க்கவில்லை. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து நிலையான வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளார்கள்.
இதேபோல், உங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஒருவர் தற்போது சவாலான கட்டத்தில் தவிக்கிறார் என்றால் நீங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு கோலியை கூறலாம். உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அவரை போன்றவர்கள் மீண்டும் வெற்றியின் உச்சத்தை தொடுவதற்கு நீண்ட கயிறை(வாய்ப்பினை) வழங்க வேண்டும். நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒரு அளவுகோலை பின்பற்ற கூடாது" என்றார்.