நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்கள் - மத்திய அமைச்சர் மதிப்பீடு!
நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்கள் - மத்திய அமைச்சர் மதிப்பீடு!
சென்ற 2019-20ம் ஆண்டு காரீப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 14 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம் டன்களாக இருந்தது. அப்போது விளைந்த தானியங்கள் மத்திய அரசால் விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தது.
தேவைக்கேற்ப மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு நாட்டின் எந்த பகுதியிலும் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. வெளிச்சந்தை விலைவாசியும் கட்டுப்படுத்தப்பட்டது.
இது போக கையிருப்பு தானியங்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்க பயன்பட்டன. ஊரடங்கால் போக்கு வரத்து முடங்கிய போதிலும் மக்களுக்கான உணவுப் பொருள்களை தங்கு தடை இன்றி நாட்டின்மூலை முடுக்குகளுக்கு கூட கொண்டு சென்று சேர்த்தோம்.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரானா காலத்திலும் ஊரடங்கால் விவசாயம் தடை இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
கொரோனா பாதிப்புகள் இந்திய கிராமப்புறங்களில் குறைவு என்றாலும் கொரோனாவை முன்னிட்டு நகர்ப்புறங்களுக்கு அரசு வழங்கிய சலுகைகள், நிவாரணம் அனைத்தும் கிராமப்புற மக்களுக்கும் கிடைத்தது.
மேலும் நன்றாக பெய்த பருவ மழையை பயன்படுத்தி, விவசாயம் சிறப்பாக நடைபெறுவதற்கான அடிப்படை வசதிகளை மத்திய அரசு செய்து கொண்டே இருந்தது.
வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியற்ற கடன்கள், மானிய முறையிலான பாசன வசதிகள், குறைந்த பிரிமியம் கொண்ட பயிர் காப்பீட்டு திட்டங்கள், விலைகள் குறைக்கப்பட்டு தட்டுப்பாடில்லாத வகையில் உரங்கள் இவற்றுக்கு உறுதி செய்யப்பட்டன.
இந்நிலையில் 2020-21ம் ஆண்டு காரீப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 14 கோடியே 45 லட்சத்து 20 ஆயிரம் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.