சாதித்த இந்தியா : அரபிக்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கிய பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை.!

சாதித்த இந்தியா : அரபிக்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கிய பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை.!

Update: 2020-10-19 15:29 GMT

ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது அரபிக்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. எதிரி நாட்டுக் கப்பல்களை தொலைதூரத்திலிருந்து தாக்கும் திறன் கொண்ட முக்கிய ஆயுதமாக பிரமோஸ் ஏவுகணை கருதப்படுகிறது.இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்து தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), பிரமோஸ் குழு மற்றும் இந்திய கடற்படைக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, டிஆர்டிஓ நிறுவனத்தின் ஊழியர்கள், விஞ்ஞானிகள், பிரமோஸ் மற்றும் இந்திய கப்பல் படைக்கு தமது வாழ்த்துக்களைக் கூறினார். இந்திய பாதுகாப்பு படைக்கு மேலும் வலுவூட்டும் வகையில் பிரமோஸ் ஏவுகணைகள் அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. சமீப நாட்களாக ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தி வருகிறது. 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள், வழக்கமான ஏவுகணைகள் என உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தயாரித்து வரும் டி.ஆர்.டி.ஓ., அடிக்கடி ஏவுகணைகள் சோதனை நடத்துவது இயல்புதான்.

ஆனால் இந்த தொடர் பரிசோதனைகள் வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என டி.ஆர்.டி.ஓ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லடாக்கில் இருந்து வெளியேற மறுக்கும் சீன ராணுவம் மீண்டும் வாலாட்டினால் அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே டி.ஆர்.டி.ஓ. இந்த பரிசோதனைகளை வேகமாக நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Similar News