ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் வீட்டுக்கே சென்று சான்றிதழ்- அஞ்சல்துறை.!
ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் வீட்டுக்கே சென்று சான்றிதழ்- அஞ்சல்துறை.!
ஜீவன் பிரமான் திட்டத்தின்கீழ் ஓய்வூதியர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று மின்னணு உயிர்வாழ்(alive) சான்று வழங்கும் திட்டத்தினை இந்தியன் போஸ்டல் பேமென்ட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வயது மூப்பின் காரணமாக அலுவலகம் சென்று ஆவணங்களைப் பெற இயலாதவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவதற்கான உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க வேண்டும். வயது மூப்பின் காரணமாக இந்தச் சான்றிதழை வாங்க இயலாதவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருந்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தின் கீழ் ஓய்வூதியப் பயனாளர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்று அளிக்கப்படும் இன்று இந்தியா போஸ்டல் வங்கி அறிவித்துள்ளது.
ஓய்வூதியர்கள் தங்கள் அருகிலுள்ள அஞ்சல் நிலைய தபால்காரரிடம் தங்களது ஆதார் எண், கைபேசி எண், மற்றும் தங்களின் ஓய்வூதிய கணக்கு ஆகியவற்றுடன் தங்களது கைவிரல் ரேகையை வைத்து 70 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றை தபால்காரர் அவரவர் வீட்டிற்கே வந்து தருவார் என்று இந்தியன் போஸ்டல் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஆண்டுதோறும் அரசு கருவூல அலுவலகத்திற்கு நேரில் சென்று தாங்கள் உயிருடன் இருக்கின்றோம் என்பதற்கான உயிர்வாழ் சான்றினை பெற இயலாதவர்கள் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வெறும் 70 ரூபாயில் மின்னணு உயிர்வாழ் சான்றினை பயனாளர்கள் பெறுவார்கள்.
ஜீவன் பிரமான் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2014 நவம்பர் 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி ஓய்வூதியர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நேரில் வந்து சமர்ப்பிக்க கூடிய இந்த உயிர்வாழ் சான்றிதழை கணினி வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். அதன்மூலம் பக்கத்தில் இருக்கும் சேவை மையங்களில் சென்று விண்ணப்பிக்கலாம் என்ற வசதி இருந்த நிலையில் தற்போது இந்த சேவையை இந்தியா போஸ்டல் வங்கியும் இந்த சேவையைத் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.