சிதறிக் கிடந்த தேசத்தை அகன்ற பாரதமாக மாற்றியவர் வல்லபாய் படேல் - அவரின் வீர வரலாறு குறித்த ஒரு பார்வை.!
சிதறிக் கிடந்த தேசத்தை அகன்ற பாரதமாக மாற்றியவர் வல்லபாய் படேல் - அவரின் வீர வரலாறு குறித்த ஒரு பார்வை.!
வல்லபாய் படேல், 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள், குஜராத் மாநிலம் கரம்சாத் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை சாவேரிபாய் படேல், ஒரு விவசாயி. வல்லபாய் படேல் அவர்கள் 1901-ஆம் ஆண்டு, "பாரிஸ்டர்" பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். பட்டம் பெற்று, தாயகம் திரும்பி, அகமதாபத்தில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.
காந்திஜியின் விடுதலையை உசுப்பி எழுப்பும் உரையைக் கேட்டவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு, சுதேசி இயக்கத்தில் இணைந்தார். குஜராத் மாநிலத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம் நிலவிய வேளையில் ஆங்கிலேய அரசிடம் வரிவிலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அப்போது, காந்திஜியை அழைத்து வந்து அவரது தலைமையில் படேல் வரி கொடா போராட்டம் நடத்தினார்.
அடுத்து, பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் பட்டேலுக்கு வெற்றி கிடைத்தது.இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமானது. கடைசியில் பிரிட்டிஷ் அரசு பணிந்தது. படேல் இளைஞனாக இருந்த காலத்தில் இது அவரது முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அன்றுமுதல் 'படைத்தலைவர்' என்னும் பொருள்படும் வகையில் காந்திஜி அவருக்கு 'சர்தார்' என்ற பட்டத்தை ஒரு கூட்டத்தில் அளித்தார். அதிலிருந்து பொதுமக்களால் சர்தார் என்றே அன்போடு அழைக்கப்பட்டார். அதன்பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
1947 - ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதும், சுதேச சமஸ்தானங்கள் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று, பிரிட்டிஸ்சார் விஷமத்தனமாக அறிவித்தது. உண்மையில் சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா ஒரு வலிமை மிக்க ஒரு நாடாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் பிரிட்டிஷார் சிந்தித்தனர். ஆனால் இந்தியாவின் துணை பிரதமரகவும், உள்துறை அமைச்சராகவும் அப்போது இருந்த படேல் தனது சாதுர்யத்தாலும், மனபலத்தாலும் யாருக்கும் அஞ்சாமல் இந்த விவகாரத்தை கையாண்டார்.