கொரோனா காலத்திற்கு பிறகு ஏவப்பட்ட முதல் ராக்கெட் வெற்றி - இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு.!
கொரோனா காலத்திற்கு பிறகு ஏவப்பட்ட முதல் ராக்கெட் வெற்றி - இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு.!
கொரோனா காலத்திற்கு பிறகு ஏவப்பட்ட முதல் ராக்கெட்திட்டம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட நிலையில், இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். PSLV சி-49 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட PSLV சி-49 ராக்கெட், இந்தியாவின் 51வது PSLV ராக்கெட் ஆகும். தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் PSLV சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு இன்று மாலை சரியாக 3.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV சி-49 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மழைப்பொழிவு காரணமாக 10 நிமிடம் தாமதமாக 3.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவுக்கு சொந்தமான EOS 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளின் நவீன ரேடார் மூலம் அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் படங்களை எடுக்க முடியும். விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கும் EOS -01 புவி ஆய்வு செயற்கைகோள் உதவும்.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், "PSLV சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து, செயற்கைக்கோள் அனைத்தும் எதிர்பார்த்தபடி பிரிந்துவிட்டன. 10 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப் பட்டுள்ளன. கொரோனா காலத்திற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெற்றியை கொடுத்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்களின் மூலமே இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு எனது நன்றி" எனக் கூறினார். இந்த நிலையில், "பல தடைகளை முறியடித்து குறிப்பிட்ட காலத்திற்குள் ராக்கெட்டை விண்ணில் ஏவிய இந்திய விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.