இனிமேல் கல்லூரிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? வெளியான வழிகாட்டுதல் அறிவிப்பு.!
இனிமேல் கல்லூரிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? வெளியான வழிகாட்டுதல் அறிவிப்பு.!
கொரோனா முடக்கம் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.இந்த வழிகாட்டுதல்கள் மத்திய சுகாதாரத்துறை சரிபார்க்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை, உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப, அரசு அதிகாரிகளுடன் உத்தரவுடன் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.
கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியேயுள்ள, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பிறகு, படிப்படியாக திறக்கலாம். அப்போது யுஜிசி தயாரித்த வழிகாட்டுதல்கள், சுகாதார நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்புக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்.
மத்திய நிதியுதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், மீண்டும் திறப்பதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப முடிவெடுக்கலாம். மாநில அரசின் மற்ற பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவை மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளின் முடிவுப்படி திறக்கலாம். பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக இடைவெளி விதிகளை பின்பற்றி கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்க பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் திட்டமிட வேண்டும்.அதன்பின்பு, ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை படிப்பு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர ஏற்பாடு செய்யலாம். அப்போதுதான் சமூக இடைவெளியையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எளிதில் அமல்படுத்த முடியும்.
மொத்த மாணவர்களில் 50% பேருக்கு மேல் வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொவிட்-19 விதிமுறைகள் கடுமையாக பின்பறப்பட வேண்டும். சில மாணவர்கள், வகுப்புகளுக்கு வராமல், வீட்டிலேயே தங்கி ஆன்லைன் மூலம் படிப்பதை விரும்பலாம். அவர்கள் கற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை கல்வி நிறுவனங்கள் செய்து கொடுக்கலாம். பயண கட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் பலர், கல்வி நிறுவனங்களுக்கு வர முடியாத சூழல் உள்ளது.
அது போன்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால், மாணவர்களின் விடுதிகளையும், தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி திறக்கலாம். ஆனால், அறைகளை மாணவர்கள் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க கூடாது. கொரோனா அறிகுறியுடன் உள்ள மாணவர்களை, எக்காரணத்தை கொண்டும் விடுதிகளில் தங்க அனுமதிக்க கூடாது. கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு முன்பு, அவை பாதுகாப்பாக உள்ளதா என்பதை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.