கொரோனா: தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் அமெரிக்க அறக்கட்டளை!

Update: 2021-06-02 12:12 GMT

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மருத்துவப் பொருட்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் பல மக்கள் தங்களுடைய நாட்டிற்காக மட்டும் அவர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பல்வேறு உதவிகளையும் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவில் இருக்கும் இரிச்மண்டு தமிழ்ச்சங்கம், கொரோனா 2வது அலை தமிழ்நாட்டை மிகவும் பாதித்துள்ளது என்பதை அறிந்து, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை திருவான்மியூர் மற்றும் ஏகம் அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஒன்று சேர்ந்திணைந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசர மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவெடுத்தது.


'ஒற்றுமையே உயர்வு' என்ற கோட்பாட்டுடன் செயல்படும் இரிச்மண்டு தமிழ்ச்சங்கம், கோவிட் நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி, வர்ஜீனியா மற்றும் பல்வேறு இடங்களில் வாழும் தமிழ் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பின் உதவியோடு இருபதாயிரம் டாலர் நிதி திரட்டி உள்ளது. உதவும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, இந்த குழு 91 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சுமார் பத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர்.


இதைப்பற்றி டாக்டர். அசோக் பாஸ்கர் கூறுகையில், "தொடர்ச்சியான ஆக்ஸிஜன் ஆதரவில் இருந்து அகற்றப்பட்ட நோயாளிக்கு இதை நாங்கள் பயன்படுத்தினோம். இந்த செறிவு இடைப்பட்ட ஆக்ஸிஜன் பயனாளிக்கு பயனுள்ளதாக இருக்கும். நிச்சயமாக இது எங்கள் ஆக்ஸிஜன் தேவைகளை குறைக்கும்" என்று கூறினார். மேலும் அந்த குழு ஆக்ஸிஜன் பாய்வு மீட்டர், N95 முக கவசங்கள், BBE கருவிகள் மற்றும் இதுபோன்ற பிற உபகரணங்களும் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News